யாழ்ப்பாணம் கொட்டடி – மீனாட்சிபுரத்தில் உள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான காணியை விடுவித்துத் தருமாறு வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் சி.யமுனானந்தா தெரிவித்தார்.
இக்காணி தொடர்பாக மேலும் கூறுகையில்,
கொட்டடி – மீனாட்சிபுரம் பகுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான 1.4 ஏக்கர் பரப்பளவுள்ள காணி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
2010ஆம் ஆண்டு தொடக்கம் இந்த காணியை விடுவித்து தரும்படி கோரிக்கை விடுத்துவருகிற போதும் இன்று வரை காணி விடுவிக்கப்படவில்லை.
இக்காணி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மேலதிக அபிவிருத்தி தேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்த காணியாகும்.
இந்த காணியில் பல வருடங்களாக இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதால் காணியை யாழ். போதனா வைத்தியசாலையின் தேவைக்காக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
இக்காணியை உடனடியாக விடுவித்து தருவதற்கு வட மாகாண ஆளுநரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாழ். போதனா வைத்தியசாலையின் தேவைகள் அதிகரித்துவரும் தற்போதைய சூழ்நிலையில் இந்த காணி அவசியமானது எனவும் துரித நடவடிக்கை எடுத்து காணியை விடுவித்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு கைகொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.