உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பு எதிர்வரும் வாரம் திட்டமிட்ட வகையில் நடத்தப்படும். தேர்தல் திகதியில் எவ்வித மாற்றமும் கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
மேலும் தெரிவித்ததாவது,
உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ளன. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை நேற்றைய தினம் தபால் திணைக்களத்திடம் ஒப்படைந்துள்ளோம். எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் வாக்காளர் அட்டை விநியோக பணிகள் நிறைவடையும்.
தபால்மூல வாக்களிப்பு பிற்போடப்படும் சாத்தியம் காணப்படுவதாக ஒருசில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை அடிப்படையற்றது. ஏற்கெனவே தீர்மானித்ததற்கமைய எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடக்கம் வியாழக்கிழமை வரையிலான மூன்று தினங்களில் தபால்மூல வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இந்த மூன்று தினங்களில் வாக்களிக்க தவறும் அரச உத்தியோகஸ்த்தர்கள் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு தினங்களில் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுலகத்தில் வாக்களிக்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் வன்முறை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை அவதானிக்க முடிகிறது. தேர்தல் செலவினங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.