வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார்.
புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், கண்டி, நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து வர்த்தக நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.
அந்நிலையில், புத்தாண்டு தினமான நேற்றைய தினம் திங்கட்கிழமை உறவினர்களுடன் தவசிக்குளம் பகுதியில் உள்ள நீச்சல் தடாகத்திற்கு சென்று , நீராடிக்கொண்டிருந்த வேளை நீரில் மூழ்கியுள்ளார்.
அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு , வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் , அவர் உயிரிழந்துள்ளார்.
அதனை அடுத்து, இளைஞரின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக பிரதே அறையில் வைப்பதற்கு வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் இருந்த குளிரூட்டி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இயங்காமையால் சடலத்தை அங்கு வைக்க முடியாது எனவும், இறந்தவரின் உறவினர்களை வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று ஒப்படைக்குமாறும், மீண்டும் வவுனியா வைத்தியசாலைன்கு கொண்டு வருமாறும் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த குடும்பத்தினர் தமது குடும்ப நிலை காரணமாக சடலத்தை செட்டிகுளம் வைத்தியாலைக்கு கொண்டு செல்ல வாகனத்தை வாடகைக்கு அமர்த்த முடியாத நிலையில் அவதிப்பட்டனர்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, வைத்தியசாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், வைத்தியசாலையால் பொறுப்பேற்கப்பட்ட சடலத்தை செட்டிகுளம் அனுப்பி அதனை மீள பெற வேணடியது வைத்தியசாலையின் பொறுப்பு எனத் தெரிவித்திருந்தார்.
அத்துடன் வவுனியாவின் பிரதான வைத்தியசாலையின் பிரேத அறை குளிரூட்டி நீண்ட நாளாக பழுதடைந்து இருந்தால் ஏன் நடவடிக்கை எடுக்கவிலலை எனவும் விளக்கம் கோரியிருந்தார்.
இதனையடுத்து வைத்தியசாலையால் சடலம் பொறுபேற்கப்பட்டு செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.