எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய – அம்பலாங்கொட வீதியில் உள்ள குருந்துகஹா நகரில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
அம்பலாங்கொடையில் இருந்து எல்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் இருந்து வந்த வேன் ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி, பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஆண் ஒருவர், 2 பெண்கள் மற்றும் 3 சிறுமிகள் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த ஏனையவர்கள் எல்பிட்டிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.