Home இலங்கை வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

by ilankai

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்பிக்கும் வேட்பாளர்கள், க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதிகளில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையும் நடைபெறும் என்பதால், வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் அனைத்து வேட்பாளர்களும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு வேட்பாளரும் இதுபோன்ற இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு பிறகு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் நிறைவடையும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் குறித்த திகதிக்குப் பின்னர் எந்தவொரு அணிவகுப்பு, வாகனப் பேரணி அல்லது ஒன்றுகூடல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles